ரன் மெஷின் என்று வர்ணிக்கப்படும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இரட்டைச் சதமடித்து, சச்சின் மற்றும் சேவாக் சாதனைகளை முறியடித்தார்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட், புனேவில், கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் இருந்த விராட் கோலி யும், ரகானேவும், இரண்டாம் நாளில், ஆட்டத்தை தொடர்ந்தனர். நிதானமாக விளையாடிய கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 26-ஆவது சதத்தை பதிவு செய்தார். சதத்திற்கு பின்னரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7-ஆவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம், 7 முறை, இரட்டைச் சதம் அடிக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றதுடன், முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் ஆகியோரின் சாதனைகளையும், கோலி, முறியடித்தார்.
டெஸ்ட் போட்டிகளில், இதற்பு முன்பு, சச்சின் மற்றும் சேவாக் இருவரும், தலா 6 இரட்டைச் சதங்கள் விளாசியுள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 6 இரட்டைச் சதங்களும், சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 இரட்டைச் சதங்களும் அடித்துள்ளனர். ராகுல் டிராவிட் 5 முறையும், சுனில் கவாஸ்கர் 4 முறையும், புஜாரா 3 முறையும், இந்திய அணிக்காக இரட்டைச் சதமடித்துள்ளனர்.
ஆனால் விராட் கோலி, தனது 81-ஆவது டெஸ்ட் போட்டியிலேயே, சச்சின் மற்றும் சேவாக் சாதனையை முறியடித்தார். கோலி அடித்த 7 இரட்டைச் சதங்களும், கேப்டனாக செயல்பட்ட போட்டிகளில் அடிக்கப்பட்டவை என்பது மற்றொரு சிறப்பு.
உலக அளவில், ஆஸ்திரேலிய வீரரான டான் பிராட்மேன், 12 முறை இரட்டைச் சதமடித்து முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.