டி.என்.பி.எல்., எனப்படும், தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாக வந்த புகாரை அடுத்து, மூன்று பேரிடம், பி.சி.சி.ஐ.,யின் ஊழல் தடுப்பு அமைப்பினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டி.என்.பி.எல்., கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதில், தமிழக கிரிக்கெட் வீரர்களும், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான, ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், முரளி விஜய் போன்ற நட்சத்திர வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம், 4வது டி.என்.பி.எல்., தொடர் நடைபெற்றது. அப்போது, அதில் பங்கேற்ற வீரர்களுக்கு மர்ம நபர்களிடம் இருந்து வாட்ஸ் அப் மூலம் தகவல் வந்துள்ளது. அதில், சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, பி.சி.சி.ஐ.,யிடம் சம்பந்தப்பட்ட வீரர்கள் அண்மையில் தெரிவித்தனர்.
இதையடுத்து, பி.சி.சி.ஐ.,யின் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பினர், இது குறித்த விசாரணையை தொடங்கி உள்ளனர். ஐ.பி.எல்., வீரர், ரஞ்சி அணி பயிற்சியாளர், அணி உரிமையாளர் ஆகியோரிடம், பி.சி.சி.ஐ., விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து தெரிவித்த, பி.சி.சி.ஐ., ஊழல் தடுப்பு அமைப்பின் தலைவர் திரு. அஜீத் சிங், வீரர்கள் அளித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், அவர்களுக்கு தகவல் அனுப்பிய நபர்களின் எண்களை வைத்து விசாரித்து வருகிறோம் என்றும் கூறினார்.