உலகக் கோப்பை கிரிக்கெட் - பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
Jul 3 2019 4:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 40-வது லீக் போட்டி, இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையே Birmingham-ல் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர், தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். 92 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா, உலகக்கோப்பை தொடரில், தனது 4-வது சதத்தை அடித்தார். அவரைத் தொடர்ந்து அரை சதமடித்த லோகேஷ் ராகுல், 77 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 314 ரன்களை குவித்தது. பங்களாதேஷ் அணியில் முஸ்தஃபிஸுர் ரகுமான், 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதனையடுத்து, 315 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய பங்களாதேஷ் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த பங்களாதேஷ் அணி, 48 ஓவரில் 286 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனான ரோஹித் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 13 புள்ளிகளை எட்டிய இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்தியாவின் வெற்றியை மைதானத்தின் வெளியே கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடினர்.