உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில், 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
Jun 10 2019 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், 'நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை, இந்தியா எதிர்கொண்டது. இதில், 'டாஸ்' வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா 57 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் எதிரணியினரின் பந்துவீச்சை சிதறடித்த தவான், ஒருநாள் அரங்கில் தனது 17-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
தவான் 117 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் கோஹ்லி, ஹர்திக் பாண்ட்யா இணைந்து அசத்தினர். கோஹ்லி 82 ரன்களும், பாண்ட்யா 48 ரன்களும் எடுத்த அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவில், தொடக்க ஆட்டக்காரர்கள் பின்ச் 36 ரன்களிலும், வார்னர் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஸ்டீவ் ஸ்மித் 69 ரன்னிலும், கவாஜா 42 ரன்களும் எடுத்தனர். ஆட்டநேர முடிவில் அந்த அணி 316 ரன்களில் ஆட்டமிழந்தது. அதிரடியாக விளையாடி கேரி 55 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், பும்ரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.