பொங்கல் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாட்டு வண்டி, படகு, நீச்சல் போட்டி : திரளான வீரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பங்கேற்பு
Jan 18 2019 3:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொங்கல் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மாட்டு வண்டி, படகு, நீச்சல் போட்டிகளில் திரளான வீரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
பொங்கல் திருநாளின் மூன்றாம் நாளான இன்று காணும் பொங்களாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் கேசவ புத்தன் துறை மீனவ கிராமத்தில், பாரம்பரிய கட்டுமர படகு போட்டி மற்றும் நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இதில் திரளான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
அரியலூர் மாவட்ட இறகு பந்தாட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகு பந்தாட்ட போட்டியில், நூற்றுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. மாவட்ட விளையாட்டு திடலிலுள்ள உள்விளையாட்டு அரங்கத்தில், லீக் மற்றும் நாக் அவுட் முறையில் மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த திருக்கடையூரில் நடைபெற்ற குதிரை மற்றும் மாட்டு வண்டி போட்டிகளில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான குதிரை மற்றும் மாட்டு வண்டிகளுடன் வீரர்கள் கலந்து கொண்டனர். முதல் 3 இடங்களைப் பிடித்த மாடுகள் மற்றும் குதிரைகளின் உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி குயிலாப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே, மாடுகளின் கொம்புகளில் வர்ணம் பூசி, பூ, பலூன்களை கட்டி, அலங்கரித்து அம்மன் முன்பு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அப்போது ஏராளமான இளைஞர்கள் மாடுகளை உற்சாகத்துடன் விரட்டிச் சென்றனர். மஞ்சுவிரட்டை பார்ப்பதற்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோரும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் குயிலாப்பாளையம் கிராமத்துக்கு வந்திருந்தனர்.