ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலம் - அதிக தொகை்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி
Dec 19 2018 4:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, குஜராத் வீரர் ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் அதிகபட்சமாக தலா 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.
12-வது ஐ.பி.எல். தொடரை முன்னிட்டு, அதற்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. 351 வீரர்கள் ஏல நிகழ்ச்சியில் போட்டியிட்ட நிலையில், அதிகபட்சமாக தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தியை 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணியும், அதே தொகைக்கு குஜராத் வீரர் ஜெயதேவ் உனத்கட்டை, ராஜஸ்தான் அணியும் ஏலம் எடுத்தன.
புதுமுக வீரரான ஹனுமா விகாரியை, 2 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது. மேற்கிந்திய தீவு அணி வீரர்களான ஷிம்ரான் ஹெட்மெயரை 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணியும், பிராத் வெயிட்டை 5 கோடி ரூபாய்க்கும் கொல்கத்தா அணியும், நிக்கோலஸ் பூரணை 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணியும் ஏலம் எடுத்தன.
இந்திய வீரர் மோகித் சர்மா 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பினார். அக்சர் படேலை 5 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியும், முகமது சமியை 4 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணியும், 25 வயதே நிரம்பிய இளம் வீரர் சிவம் துபேவை 5 கோடி ரூபாய் கொடுத்து பெங்களூரு அணியும் ஏலம் எடுத்தன.
இந்திய அணியின் யுவராஜ் சிங்கை, அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.