வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
Nov 7 2018 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லக்னோவில் உள்ள எகனா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியில் வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் களம் இறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 13 புள்ளி 6 ஓவர்களில் 123 ரன்களை இந்திய அணி எட்டியிருந்த போது, ஷிகர் தவான் 43 ரன்களில் வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய இளம் வீரர் ரிஷாப் பண்ட் 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ஆனால், மறு முனையில், சிக்சர்களும் பவுண்டரிகளுமாக அடித்து ரசிகர்களுக்கு, ரோகித் சர்மா தீபாவளி விருந்து படைத்தார். அவருக்கு பக்க பலமாக ராகுலும் விளையாடினார். அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா, கடைசி ஓவரில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மா அடிக்கும் 4-வது சதம் இதுவாகும்.
இறுதியில் இந்திய அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தது.
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் ஹோப், ஹட்மயர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் விக்கெட்டுகள் விழுந்தன. அந்த அணியில் அதிகபட்சமாக பிராவோ 23 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் வெஸ்ட் இண்டிஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் வெஸ்டிண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.