உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில், குரோஷியாவை 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, ஃபிரான்ஸ் அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், நடப்பு சாம்பியன் ஜெர்மனி, முதல் சுற்றிலேயே வெளியேறியது. முன்னாள் சாம்பியன்கள் ஆர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் 2-வது சுற்றுடன் நடையைக்கட்ட, 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில், கால் இறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.
ஐரோப்பிய அணிகளான முன்னாள் சாம்பியன் ஃபிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இவ்விரு அணிகளில் உலக கிரீடம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி, மாஸ்கோ நகரில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது. முன்னாள் சாம்பியனான பலம்வாய்ந்த ஃபிரான்ஸை, முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குரோஷியா எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 18-வது நிமிடத்தில் பிரீகிக் வாய்ப்பில் ஃபிரான்ஸ் வீரர் கிரீஸ்மான் அடித்த பந்தை தடுக்க முற்பட்ட குரோஷியா வீரர் மான்ஸ்சுகிக் தலையில்பட்டு 'சேம் சைடு' கோலானது. இதனைத் தொடர்ந்து 28-வது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிக் அட்டகாசமான கோல் அடிக்க, போட்டி சமநிலை அடைந்தது. 38-வது நிமிடத்தில் ஃபிரான்சுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை, அந்நாட்டு வீரர் கிரீஸ்மான், லாவகமாக பயன்படுத்தி கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில், ஃபிரான்ஸ் அணி 2-க்கு 1 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஃபிரான்ஸ் வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். 59-வது நிமிடத்தில் போக்பாவும், 65-வது நிமிடத்தில் மபபேவும் அடுத்தடுத்து கோல் அடித்ததால், 4-க்கு 1 என வலுவான நிலையில் ஃபிரான்ஸ் முன்னிலை பெற்றது.
69-வது நிமிடத்தில் ஃபிரான்ஸ் கோல் கீப்பரின் தவறால், குரோஷிய வீரர் மான்ட்சுகிச் கோல் அடித்து போட்டியில் விறுவிறுப்பை ஏற்றினார். எனினும், இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இறுதியில் 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஃபிரான்ஸ் அணி, 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம், இந்த உலகக்கோப்பை போட்டியில் தோல்வியையே சந்திக்காமல் கோப்பை வென்ற அணி என்ற பெருமையையும் பிரான்ஸ் அணி பெற்று சாதனை படைத்தது.
முதல் இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு 255 கோடி ரூபாய் பணம் ரொக்க பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த குரோஷியா அணிக்கு 188 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இதனிடையே, இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, குரேஷிய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற அந்த அணியின் கேப்டன் லுகா மோட்ரிக், தங்க பந்து விருதை வென்றார். இதேபோல், சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கிளவ் விருதை, 3-வது இடத்தைப் பிடித்த பெல்ஜியம் வீரர் திபாட் கோர்டியோஸ் பெற்றார். இங்கிலாந்தை சேர்ந்த ஹேரி கேனுக்கு தங்ககாலணி விருதும், இளம் வீரருக்கான விருது 19 வயதேயாகும் ஃபிரான்ஸ் வீரர் மாப்பேவுக்கும் வழங்கப்பட்டது.