ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில், எதிர்பாராத நிகழ்வாக, நடப்புச் சாம்பியனான ஜெர்மனி, "நாக் அவுட்" சுற்றுக்கு தகுதி பெறாமல், போட்டியிலிருந்து வெளியேறியது.
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. F பிரிவு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி, தென் கொரியாவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் ஜெர்மனி அணி களமிறங்கியது. போட்டி தொடங்கியதில் இருந்தே ஜெர்மனி அணி கோல் போட தொடர்ந்து முயற்சித்தது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் தென்கொரியா அணி எளிதாக முறியடித்தது. இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இரு அணியும் கோல் அடிக்க முடியாமல் இருந்தனர். இந்நிலையில், கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில், தென்கொரியா இரண்டு கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஜெர்மனி அணி கோல் அடிக்காததால், கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் 'எஃப்' பிரிவு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட ஜெர்மனி அணி, தொடரைவிட்டு வெளியேறியது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முதல் சுற்றோடு ஜெர்மனி வெளியேறுவது, கடந்த 80 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.
F பிரிவு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில், மெக்சிகோவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஸ்வீடன் அணி, "நாக்-அவுட்" சுற்றுக்கு முன்னேறியது. இருப்பினும், புள்ளிகள் அடிப்படையில் மெக்சிகோவும் "நாக் அவுட்" சுற்றுக்கு முன்னேறியது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இ பிரிவு லீக் ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து அணியும், கோஸ்டாரிகா அணியும் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது. இதன்மூலம், சுவிட்சர்லாந்து அணி "நாக் அவுட்" சுற்றுக்கு தகுதி பெற்றது.
மாஸ்கோவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், செர்பியா, பிரேசில் அணிகள் மோதின. பிரேசில் அணியில், பாலின் ஹோ, தியாகோ சில்வா தலா ஒரு கோல் அடிக்க, அந்த அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் "நாக் அவுட்" சுற்றுக்கு பிரேசில் அணி தகுதி பெற்றது.