உலகக்கோப்பை கால்பந்துபோட்டியில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், பனமாவை தோற்கடித்து இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மற்றோரு போட்டியில் போலந்து அணியை 3-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கொலம்பியா தோற்கடித்தது. ஜப்பான் - செனகல் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்துப்போட்டியில், தற்போது விறுவிறுப்பான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு அணியும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. கசான் நகரில் நேற்று இரவு 11.30 மணிக்கு நடைபெற்ற "H" பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில், கொலம்பியா - போலந்து அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய கொலம்பியா, 40-வது நிமிடத்தில் கோல் அடித்து முதல் பாதி ஆட்டத்தில் முன்னிலை பெற்றது. மறுபாதி ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய கொலம்பியா, 70 மற்றும் 75-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. இறுதிவரை போலந்து அணியால் கோல் அடிக்க முடியாததால், கொலம்பியா அணி 3-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது.
எகடரின்பர்க் நகரில் நேற்றிரவு 8.30 மணிக்கு நடைபெற்ற "H" பிரிவின் மற்றொரு ஆட்டத்தில், ஜப்பான் - செனகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் சம பலத்துடன் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், முதல் பாதி ஆட்டத்தில் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. மறுபாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியதால், 71-வது நிமிடத்தில் செனகல் அணி ஒரு கோல் அடிக்க, 78-வது நிமிடத்தில் ஜப்பானும் பதில் கோல் அடித்து மிரட்டியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 2-க்கு 2 என இப்போட்டி சமனில் முடிந்தது. எனினும், இரு அணிகளும் ஏற்கெனவே தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், 4 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களை தக்கவைத்துக்கொண்டன.
முன்னதாக மாலை 5.30 மணிக்கு, நிஸ்னி நோகொராட் நகரில் நடைபெற்ற "G" பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில், பலம்வாய்ந்த இங்கிலாந்து அணியை, பனாமா அணி எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய 8 நிமிடத்திலேயே கோல் அடித்த இங்கிலாந்து, 22, 36, 40, 45 என அடுத்தடுத்த நிமிடங்களில் கோல்மழை பொழிந்து எதிராணியை திணறடித்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 5-க்கு பூஜ்ஜியம் என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது. மறுபாதி ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி, 62-வது நிமிடத்தில் மேலும் ஒருகோல் அடித்தது. யாரும் எதிர்பாராத வகையில், 78-வது நிமிடத்தில் பனாமா அணி கோல் அடித்து ஆறுதல் அடைந்தது. ஆட்டநேர முடிவில் 6-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றிபெற்று, நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
உலகக்கோப்பை கால்பந்துப்போட்டியில், இன்று "A" மற்றும் "B" பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. Volgograd நகரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள "A" பிரிவுக்கான முதல் போட்டியில் சவூதி அரேபியா - எகிப்தையும், Samara நகரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 2-வது போட்டியில் ரஷ்யா - உருகுவே அணிகளும் மோதுகின்றன. இரவு 11.30 மணிக்கு Mordovia நகரில் நடைபெறவுள்ள "B" பிரிவுக்கான முதல் லீக் போட்டியில், ஈரான் - போர்ச்சுக்கல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. Kaliningrad நகரில் இரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில் ஸ்பெயின் - மொராக்கோ அணிகள் மோதுகின்றன.