காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தொடரும் இந்தியாவின் பதக்க வேட்டை - மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் சுஷில்குமார், ராகுல் தங்கம் வென்று அபாரம் - துப்பாக்கிச்சுடுதலில் தேஜஸ்வினி, மல்யுத்தத்தில் பபிதா குமாரிக்கு வெள்ளிப்பதக்கம்
Apr 12 2018 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவிற்கு இன்று ஆடவர் மல்யுத்தத்தில் 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய மல்யுத்த வீரர்கள் சுஷில்குமார், ராகுல் அவேரே ஆகியோர் தங்கம் பதக்கம் வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்தனர்.
ஆஸ்திரேலியாவின் Gold coast கோஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளான இன்று, துப்பாக்கிச்சுடுதல், ஹாக்கி, பேட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. மல்யுத்தத்தில் ஆடவர் ஃப்ரீ ஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், இங்கிலாந்தின் ஜார்ஜ் ராம்மை வீழ்த்தி இந்தியாவின் ராகுல் அவேரே தங்கப் பதக்கம் வென்று முத்திரைப் பதித்தார். இன்று இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.
இதைத் தொடர்ந்து, ஆடவர் ஃப்ரீ ஸ்டைல் 74 கிலோ எடைப் பிரிவு, மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் சுஷில்குமார் தங்கம் வென்று அசத்தினார். இது, காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு கிடைத்த 14-வது தங்கமாகும்.
முன்னதாக நடைபெற்ற மகளிர் 50 மீட்டர் ரைஃபிள் ப்ரோன் துப்பாக்கிச் சுடுதல் பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் தேஜஸ்வினி ஷவந்த், அன்சும் மவுட்கில் ஆகியோர் பங்கேற்றனர். இப்போட்டியில் அபாரத் திறமையை வெளிப்படுத்திய தேஜஸ்வினி, 6 சுற்றுகளின் முடிவில், 618 புள்ளி 9 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். சிங்கப்பூர் வீராங்கனை மார்டினா லின்ட்சே வெலோசோ, 621 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கத்தை தன்வசமாக்கினார். ஸ்காட்லாந்துக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
மல்யுத்தத்தில் மகளிர் ஃப்ரீ ஸ்டைல் 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பபிதா குமாரி, நைஜீரிய வீராங்கனை போஸ் சாமுவேலை வீழ்த்தி, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மகளிர் துப்பாக்கிச்சுடுதல் மற்றும் மல்யுத்தப் போட்டிகளில் இன்று பதக்கம் வென்றதன் மூலம், பதக்கப் பட்டியலில், 14 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.