டிராவில் முடிந்தது டெல்லி டெஸ்ட் - தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா - தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர்களில் வெற்றிபெற்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் சாதனையை சமன் செய்தது
Dec 6 2017 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் நடைபெற்ற இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதன்மூலம் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 536 ரன்களும், இலங்கை 373 ரன்களும் எடுத்தன. பின்னர் இந்திய அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டிற்கு 246 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளர் செய்தது. இதன்மூலம் 410 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை விளையாடிவந்த இலங்கை அணி, ஆட்டத்தின் கடைசி நாளான இன்று 3 விக்கெட்டிற்கு 31 ரன்கள் என்ற ஸ்கோருடன் பேட்டிங்கை தொடர்ந்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மேத்யூஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில், ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் அந்த அணி கடும் நெருக்கடிக்குள்ளானது. எனினும் பின்னர் ஜோடி சேர்ந்த டி.எம். டிசில்வாவும், கேப்டன் சந்திமாலும் சிறப்பாக விளையாடி சரிவை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இப்போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கடந்த 2015ம் ஆண்டு முதல், இந்திய அணி தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியதன் மூலம், முந்தைய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் சாதனையை சமன் செய்துள்ளது.
இலங்கை அணி கேப்டன் சண்டிமால் 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 164 ரன்கள் எடுத்ததன் மூலம் தனது அதிகபட்ச ஸ்கோரை எட்டியுள்ளார். இந்தத் தொடரில் கேப்டன் விராட்கோலி அதிகபட்சமாக 610 ரன்களை குவித்து தொடர் நாயகன் மற்றும் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.