20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெறும் திட்டம் ஏதும் இல்லை : மகேந்திர சிங் தோனி திட்டவட்ட முடிவு
Nov 12 2017 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெறும் திட்டம் ஏதும் இல்லை என முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி நியூசிலாந்துடனான 2-வது போட்டியில் படுதோல்வி அடைந்தது. முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இப்போட்டியில் நிதானமாக ஆடியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என பலரும் குற்றம்சாட்டினர். குறிப்பாக, இந்திய அணியின் முன்னாள் வீரர்களான VVS லக்ஷ்மன் மற்றும் அஜித் அகர்கர் போன்றோர் தோனி ஓய்வு பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், துபாயில் தொடங்கியுள்ள கிரிக்கெட் அகாடமியின் திறப்பு விழாவில் பங்கேற்று விட்டு, செய்தியாளர்களுக்கு தோனி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து அல்லது கொள்கை இருக்கும் என்றும், ஒரு சிலர் 1 ஆண்டு விளையாடுவார்கள், சிலர் 15 முதல் 20 ஆண்டுகள் வரை விளையாடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்காக நாம் விளையாடுவது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என குறிப்பிட்டுள்ள அவர், அந்த ஊக்கம்தான் இந்திய அணியில் தாம் இதுவரை இருந்து வருவதற்கு மிகப்பெரிய காரணம் என தெரிவித்தார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து தற்போது ஓய்வுபெறும் திட்டம் ஏதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோனி, ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். கடந்த ஜனவரி மாதம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.