இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : 100 சதவீதம் உடல் தகுதி பெற்றால் மட்டுமே பங்கேற்பேன் கேப்டன் விராட் கோலி
Mar 24 2017 5:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தர்மசாலாவில் நாளை தொடங்கவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 100 சதவீதம் உடல் தகுதி பெற்றால் மட்டுமே பங்கேற்பேன் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இதனால், தொடரில் இரு அணிகளும் 1க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, ஹிமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நாளை தொடங்குகிறது.
இப்போட்டியையொட்டி, இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ராஞ்சி போட்டியின் போது தோள்பட்டையில் காயம் அடைந்துள்ள கேப்டன் விராட்கோலி, இன்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால், நாளைய போட்டியில் அவர் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே செய்தியாளர்களை இன்று சந்தித்த கேப்டன் கோலி, 100 சதவீதம் உடல் தகுதி பெற்றால் மட்டுமே கடைசி போட்டியில் களமிறங்குவேன் என தெரிவித்துள்ளார்.