இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - இந்திய அணி 'திரில்' வெற்றி - யுவராஜ்சிங், டோனியின் சதத்தால் தொடரையும் வென்று அபாரம்
Jan 20 2017 8:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், யுவராஜ் சிங், தோனி சதம் விளாச, இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் வென்று இந்தியா முத்திரைப் பதித்துள்ளது.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி, 25 ரன்களை சேர்ப்பதற்குள் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல், தவான் மற்றும் விராட் கோலியின் விக்கெட்டுகளை விரைவில் இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த யுவராஜ்சிங்கும், தோனியும் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ் சிங், தோனி ஆகியோர் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர்.
அணியின் ஸ்கோர் 281-ஆக உயர்ந்த நிலையில், யுவராஜ் சிங், 150 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜாதவ், 22 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த தோனி, 134 ரன்களில் அவுட்டானார். 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் குவித்தது.
பின்னர் 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, Hales 14 ரன்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராய் 82 ரன்களிலும், ரூட் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நம்பிக்கையுடன் விளையாடிய கேப்டன் மோர்கன் சதம் விளாச ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், 102 ரன்களுடன் மோர்கன் ரன் அவுட்டாக, இந்தியாவின் வெற்றி உறுதியானது. முடிவில், இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம், 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடிய இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றது. ஆட்டநாயகனாக யுவராஜ்சிங் தேர்வு செய்யப்பட்டார்.