லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தாதது தொடர்பாக, உச்சநீதிமன்றம் விடுத்த கண்டனம் எதிரொலி : மும்பையில் அவசரமாகக் கூடியது பி.சி.சி.ஐ.யின் சிறப்புக் கூட்டம்
Oct 1 2016 2:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் வாரியத்தை சீர்படுத்த நீதிபதி திரு. லோதா தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்தாதது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக B.C.C.I.யின் சிறப்பு கூட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது.
B.C.C.I. எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை சீர்படுத்த, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு. R.M. லோதா தலைமையிலான குழு, பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருந்தது. அந்தப் பரிந்துரைகளை B.C.C.I. இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி திரு. லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தாத B.C.C.I.யின் உயர்மட்ட நிர்வாகிகளான திரு. அனுராக் தாகூர் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அப்போது, நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தாதது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பரிந்துரைகளை அமல்படுத்தாததன் காரணத்தை, வரும் 6-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று B.C.C.I.-க்கு உத்தரவிட்டனர். தான் வகுத்ததே சட்டம் என B.C.C.I. நினைத்துக்கொள்ளக்கூடாது என்றும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்க B.C.C.I.யின் சிறப்பு கூட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினராக, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் பதவி வகிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி திரு. லோதா தலைமையிலான குழு ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.