சேலத்தில் நடைபெற்று வரும் காவல்துறையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் : 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்பு
Aug 25 2016 7:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில் நடைபெற்றுவரும் காவல்துறையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
சேலத்தில், காவல் துறையினருக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கின. இதில், குங்ப்பூ, கராத்தே, மல்யுத்தம், பளுத்தூக்குதல், குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இந்த போட்டிகளில், கமாண்டோ படை, ஆயுதபடை உள்ளிட்டவற்றில் பணியாற்றும் 520 காவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளான நேற்று குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இருபாலருக்கும் தனித்தனியே நடைபெற்ற இப்போட்டிகளில், காவலர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். இன்று நடைபெறும் இறுதிப்போட்டிகளில் வெற்றி பெறும் காவலர்களுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில், பள்ளி மாணவிகளுக்கான குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில், 42 பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் புதுச்சேரி பயிற்சி மையத்தில், கடந்த 3 நாட்களாக கபடி மற்றும் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்டன. இதில், கபடி போட்டியில் ஆடவர் பிரிவில் புதுச்சேரி அணியும், பெண்கள் பிரிவில் திருவனந்தபுரம் அணியும் சாம்பியன் பட்டம் வென்றன. கைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கேரளாவைச் சேர்ந்த கோழிக்கோடு அணியும், பெண்கள் பிரிவில் கேரளாவைச் சேர்ந்த தளச்சேரி அணியும் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பையும், பரிசுகளும் வழங்கப்பட்டன.