முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள் நெல்லையில் தொடங்கின : ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு
Jul 30 2016 8:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் கோப்பைக்கான, மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள் நெல்லையில் தொடங்கின. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் கோப்பைக்கான டென்னிஸ் குழு விளையாட்டுப் போட்டிகள், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் தொடங்கின. ஆண்கள் பிரிவில் சென்னை, மதுரை உட்பட 6 மாவட்ட அணிகளும், பெண்கள் பிரிவில், தஞ்சை, நெல்லை உட்பட 8 மாவட்ட அணிகளும் கலந்துகொண்டுள்ளன. ஆண்கள் பிரிவில் சென்னை, கோயம்புத்தூர் அணிகள் லீக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றன. பெண்கள் பிரிவில் சென்னை அணி லீக் போட்டிக்கு தகுதி பெற்றது.
இதேபோல், முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டிகள், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கின. மதுரை, சென்னை, கோவை, திருச்சி மண்டலங்களை சேர்ந்த 16 மாவட்ட அணிகளைச் சேர்ந்த சுமார் 300 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். மகளிர் பிரிவில் சென்னை, சேலம், திண்டுக்கல், கடலூர் அணிகளும், ஆடவர் பிரிவில் சென்னை, தஞ்சை, காஞ்சிபுரம், திண்டுக்கல் ஆகிய அணிகள் லீக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கைப்பந்துக் குழு சார்பில் மாநில மகளிர் கைப்பந்து போட்டிகள் தொடங்கின. சேலம், கோவை, திருச்சி உட்பட 14 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் முறையில் நடைபெறும் போட்டிகளில் தேர்வு செய்யப்படும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தொடக்க ஆட்டத்தில் சென்னை தனியார் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
இதனிடையே, புதுச்சேரியில் மாநில அளவிலான கபடிப் போட்டிகள் தொடங்கின. அபிஷேகப்பாக்கத்தில் 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களைச் சேர்ந்த 54 அணிகள் பங்கேற்றுள்ளன. பல்வேறு எடை பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.