பஞ்சாபில் நடைபெற்று வரும் கிராம ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா - பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டுகளிப்பு
Feb 7 2016 2:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஊரக ஒலிம்பிக் போட்டியில், வீரர் - வீராங்கனைகள் நிகழ்த்திய சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
தற்காப்புக் கலைகளை பிரபலப்படுத்தும் வகையிலும், திறமைகளை வெளிப்படுத்தும் விதத்திலும் பஞ்சாப் மாநிலம் Kila Raipur-ல் ஊரக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் - இளம்பெண்கள், முதியோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆண்களுக்கான ஓட்டப்போட்டி, மாணவிகளுக்கான குண்டு எரிதல் போட்டி உள்ளிட்ட போட்டிகளுடன் சாகச நிகழ்ச்சிகளும் நிகழ்த்திக் காட்டப்பட்டன. இளம் வீரர் ஒருவர் ஓடும் மோட்டார் சைக்கிளில் நடனமாடியது, நெருப்பு வளையத்திற்குள் புகுந்து செல்வது, எரியும் மார்பிள் கற்களின் தொகுப்புகளை கையால் அடித்து உடைப்பது போன்ற துணிச்சல் மிகு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும், காதில் கயிறு கட்டி காரை இழுத்துச் செல்வது, வாயால் மிதிவண்டியை தூக்கி நிறுத்துவது, நெஞ்சில் பெரிய கல்லை ஏற்றி அதன்மீது ஒருவரை ஏறி நிற்கச் செய்வது போன்ற சாகச நிகழ்ச்சிகள் மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்திருந்தன. இன்று மாலை வரை நடைபெறவுள்ள இந்த ஊரக ஒலிம்பிக் போட்டியில், மேலும் சில சாகச நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.