ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆல்-ரவுண்டர் பவன் நெகி ஆகியோருக்கு, மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மனிஷ் பாண்டே அணியில் இடம்பெறவில்லை.
20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் ஆசிய போட்டிக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மகேந்திரசிங் தோனி தலைமையிலான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி, வரும் 9ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை இலங்கைக்கு எதிரான மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தப் போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி என 5 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசியக் கோப்பை 20 ஓவர் போட்டித் தொடர், வரும் 24-ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறுகிறது. வழக்கமாக 50 ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்தப்படும் ஆசியக்கோப்பை போட்டிகள், இம்முறை 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளைக் கருத்தில் கொண்டு, 20 ஓவர்களாக மாற்றப்பட்டுள்ளது. உலகக்கோப்பைக்கான 20 ஓவர் போட்டிகள் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியில், ரஹானே, வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமி, ஆல் ரவுண்டர் பவன் நெகி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். மனிஷ்பாண்டே மற்றும் புவனேஷ்குமார் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.
கேப்டன் மகேந்திரசிங் தோனி, ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா, ஆசிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், முஹமது ஷமி, பவன் நெகி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.