தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடரை வென்றது இந்தியா - 3-வது டெஸ்டில், 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
Nov 27 2015 1:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாக்பூரில் நடைபெற்ற தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், இத்தொடரை வென்றுள்ள இந்திய அணி, 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்தியா - தென்னாப்ரிக்கா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாக்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில், 215 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்ரிக்க அணி, இந்திய சுழற்பந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால், 79 ரன்களில் சுருண்டது. இது இந்தியாவுக்கு எதிராக தென்னாப்ரிக்க அணியின் மோசமான ஸ்கோர் ஆகும். 136 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி, 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்ரிக்க அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது. இன்றும் தொடர்ந்து விளையாடிய தென்னாப்ரிக்க வீரர்கள், அஸ்வினின் சுழற்பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 185 ரன்கள் எடுத்திருந்தபோது, தென்னாப்ரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து, 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், தொடரை வென்றுள்ள இந்திய அணி, 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, முதல் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
மேலும், தொடர்ந்து 9 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததில்லை என்ற தென்னாப்ரிக்காவின் சாதனைக்கு, இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்தது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 12 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் இப்போட்டியின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.