மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி - இறுதி ஆட்டத்தில் மோதும் அமெரிக்கா, ஜப்பான் அணிகள் தீவிர பயிற்சி
Jul 4 2015 8:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனடாவில் நாளை நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பைக்கான கால்பந்து இறுதி போட்டியில் பங்கேற்கும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மகளிர் உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் கனடாவில் நடைபெற்று வருகின்றன. நாளை வான்கூவரில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், அமெரிக்கா - ஜப்பான் அணிகள் மோதுகின்றன. கடந்த முறை ஜப்பானிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்த அமெரிக்க அணியினர், இம்முறை இறுதிப் போட்டியில் வெற்றி வாகைசூட தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவை மீண்டும் வெற்றி கொள்வது என்ற முனைப்புடன் ஜப்பான் அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விரு அணிகளில் வெற்றிபெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு, உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களிடம் நிலவுகிறது. இறுதிப்போட்டியை காண வரும் கால்பந்து ரசிகர்களை வரவேற்கும் வகையில் வான்கூவர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கால்பந்துப் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் முழுவீச்சில் விற்பனையாகி வருகின்றன. கட்டணம் அதிகமாக உள்ளபோதிலும், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.
இதனிடையே, வெற்றிபெற போகும் அணிக்கு வழங்குவதற்காக உலகக் கோப்பை தயார் நிலையில் உள்ளது. 1998-ம் ஆண்டில் இருந்து வெற்றிபெறும் மகளிர் அணிக்கு தன் கையால் உலகக் கோப்பையை வழங்கிவந்த FIFA தலைவர் Sepp Blatter ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பதால், இம்முறை அவர் வெற்றிக் கோப்பையை வழங்கமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.