ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 4ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் : இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபாரம்
Oct 16 2021 10:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில்
நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. சிக்சர்களாக பறக்கவிட்ட டூ பிளெசிஸ் 86 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இதில் ஷுப்மன் கில் 51 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும் குவித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால் இவர்களுக்குப் பிறகு வந்தவர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஐ.பி.எல். 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை தோற்கடித்து, சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் பாப் டுபிளெசிஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.