ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதியாட்டம் இன்று : சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பலப்பரீட்சை
Oct 15 2021 10:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதியாட்டம் இன்று நடைபெறுகிறது. 4-வது முறையாக கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் சென்னை அணியும், 3-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் கொல்கத்தா அணியும் களமிறங்குகின்றன.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மகுடத்துக்கான இறுதிப்போட்டி, துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறுகிறது. இதில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. சென்னை அணி இந்த சீசனில் 6 முறை வெற்றிகரமாக சேசிங் செய்து அசத்தியுள்ளது. இதனால் டாஸ் ஜெயித்தால், முதலில் பந்துவீசவே முன்னுரிமை கொடுப்பார்கள். டோனியின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி 4-வது பட்டத்தை உச்சி முகருமா? என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
கொல்கத்தா அணியை பொறுத்தவரையில், 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி, மூன்றிலும் வெற்றிபெற்று மகுடம் சூட்டியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்து, கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. மகுடம் சூடப் போவது தோனி-ஃபிளம்மிங்கின் வியூகங்களா? அல்லது மார்கன்- மெக்கலம்மின் திட்டங்களா? என்பது இறுதிப் போட்டி மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
போட்டிக்கான பரிசுத்தொகை கடந்த ஆண்டு போன்றே, கோப்பையை வெல்லும் அணிக்கு 10 கோடி ரூபாயும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ஆறே கால் கோடி ரூபாயும் வழங்கப்படும் என தெரிகிறது.