ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வென்றது கொல்கத்தா - நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னையுடன் பலப்பரீட்சை
Oct 14 2021 7:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் விறுவிறுப்பான ஆட்டத்தில், டெல்லியை வென்று கொல்கத்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஷார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள், தட்டுத்தடுமாறி ரன்களை எடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா 18 ரன்கள் - ஷிகார் தவான் 36 ரன்கள் - அடுத்து வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ் 18 - ஸ்ரேயாஸ் ஐயர் 30 - ஹெட்மயர் 17 ரன்கள் என 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும், ஃபெர்குசன் மற்றும் ஷிவம் மவி தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
136 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மான் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் வலுவான அடித்தளத்தை அமைத்து, அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். அரை சதம் அடித்த வெங்கடேஷ் ஐயர் 55 ரன்களுடன் வெளியேற அதன் பிறகு வந்த நிதிஷ் ராணா 13 ரன்களிலும், சுப்மான் கில் 46 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக், கேப்டன் மோர்கன், ஷகிப் அல் ஹாசன், சுனில் நரேன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியது, போட்டியில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கொல்கத்தா அணி, எளிதாக வெற்றியை எட்டிவிடும் என ரசிகர்கள் மத்தியில் இருந்த அவா மாறியது.
6 பந்துகளில் 7 ரன்கள் என்றபோது, கடைசி ஓவரை ரவிச்சந்திரன் அஷ்வின் வீசினார். அடுத்தடுத்த 2 பந்துகளில் ஷகிப் அல் ஹாசன் மற்றும் சுனில் நரேன் விக்கெட்டுகளை எடுத்தபோது, 2 பந்துகளில் 6 ரன்கள் என டெல்லியின் கைவசம் போட்டி சென்றது. எனினும், ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய 5-வது பந்தில் திரிப்பாட்டி அடித்த சிக்சர், கொல்கத்தா வீரர்களின் இதயத்துடிப்பை இயல்புநிலைக்கு உள்ளாக்கியது.
இப்போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா அணி, நாளை சென்னை அணியுடன் இறுதிப்போட்டியில் களமிறங்குகிறது.