ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண 16 வயதுக்குட்பட்ட ரசிகர்களுக்கு அனுமதி இல்லை - ஐக்கிய அரபு அமீரக அறிவிப்பு
Sep 19 2021 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐபிஎல் போட்டிகளை காண மைதானத்துக்கு வரும் 16 வயதுக்குட்பட்ட ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும் சூழலில், போட்டிகளை ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், ரசிகர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, துபாய் மைதானத்திற்கு செல்லும் ரசிகர்கள் கொரோனா இல்லா சான்றிதழ் கொண்டு செல்ல தேவையில்லை. ஆனால், கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தியிருப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சார்ஜா மைதானத்தைப் பொருத்தவரை, 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழுடன், 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை சான்றிதழை கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அபுதாபி மைதானத்திற்கு வரும் ரசிகர்களில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ், கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும், 12 வயதிற்கு உட்பட்டவர்கள், 21 வயதுக்கு மேற்பட்ட ஒருவரின் துணையுடன் வரவேண்டும் எனவும் ஐக்கிய அரபு அமீரக அரசு கூறியுள்ளது.