டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் - 49 கிலோ பளுதூக்குதல் எடை பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு
Jul 24 2021 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றுள்ளது. 49 கிலோ பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்று வரும் விளையாட்டு பிரிவுகளில், இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் இந்தியாவின் பதக்க கணக்கை மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 26 வயது வீராங்கனை மீராபாய் சானு தொடங்கி வைத்தார். 49 கிலோ எடைப் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்னாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை அவர் தூக்கினார். ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை பதக்கம் வெல்வது இது இரண்டாம் முறை. இதற்கு முன்னர் 2000-வது ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரி பளு தூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.