200க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் உலகின் பிரம்மாண்ட விளையாட்டு திருவிழா - ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது ஒலிம்பிக்
Jul 23 2021 11:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒலிம்பிக் போட்டியின் கோலாகல தொடக்க விழா, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கல் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் கூடிய தொடக்க விழாவை, அந்நாட்டு மன்னர் தொடங்கி வைக்கிறார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 3வது முறையாக கடந்த ஆண்டு நடைபெற இருந்தது. ஏற்பாடுகள் எல்லாம் முடிந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரச்னை பூதாகரமாக எழுந்ததை அடுத்து போட்டி இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஜப்பானில் இப்போதும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் நிலவுவதால் அங்கு ஒலிம்பிக்கை நடத்த கடும் எதிர்ப்பு, போராட்டங்கள் நடைபெற்றன. எனினும், இந்த ஆண்டு போட்டியை நடத்துவதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், ஜப்பான் அரசும் உறுதியாக உள்ளன. அதற்கு வசதியாக நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ், தடகளம் உள்பட குழு, தனிநபர் என 46 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 11 ஆயிரத்து 683 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களை தவிர பயிற்சியார்கள், அணி மேலாளர்கள், உதவியாளர்கள், மருத்துவர்கள், முடநீக்கியல் நிபுணர்கள் என 205 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் ஜப்பானில் முகாமிட்டுள்ளனர்.
டோக்கியோவில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு 'ஒலிம்பிக் சுடர்' ஏற்றும் நிகழ்வுடன் ஒலம்பிக் போட்டி தொடங்குகிறது. ஜப்பான் மன்னர் நாருஹிடோ போட்டியை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சூகா, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாக் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட 1000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் பாரம்பரியப் பெருமையை விளக்கும் வகையிலான கலைநிகழ்ச்சிகள், பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழவதிலும் இருந்து இந்தியா உட்பட 205 நாடுகளை சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தொடக்கவிழா அணிவகுப்புடன் ஒலிம்பிக் கொண்டாட்டம் தொடங்குகிறது. அணிவகுப்பில் இந்தியா சார்பில், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் தேசியக் கொடி ஏந்தி தலைமையேற்க உள்ளனர்.