2032-ம் ஆண்டு ஒலிம்பிக் திருவிழா ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Jul 22 2021 6:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரும் 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் திருவிழா, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு, இந்த ஆண்டு வரும் 23-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 8-ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் வரும் 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தும் வாய்ப்பை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரம் பெற்றுள்ளது. வழக்கமாக ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான நகரங்களைத் தேர்வு செய்ய ஏலம் நடத்தப்படும் நிலையில், இம்முறை போட்டி ஏதுமின்றி பிரிஸ்பேன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசித்த பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரிஸ்பேன் ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாக நடத்தப்படும் என உறுதி அளித்தார். முன்னதாக கடந்த 2000-மாவது ஆண்டில் ஆஸ்திரேலியாவின் சிட்னியிலும், கடந்த 1956-ம் ஆண்டு மெல்பர்னிலும் போட்டிகள் நடந்தன. இந்நிலையில் வரும் 2024-ம் ஆண்டு பாரீசிலும், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீசிலும் ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட உள்ளது.