ஐ.பி.எல். தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி - 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வென்றது
Apr 17 2021 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
மும்பையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, கேப்டன் கே.எல். ராகுல் உட்பட முன்னணி வீரர்கள் 5 பேரின் விக்கெட்டுகள் வீழ்ந்ததை அடுத்து, தொடக்க முதலே தடுமாற்றத்திற்கு ஆளானது. அந்த அணியின் Sharukh Khan மட்டும் நிதானமாக விளையாடி ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். பின்னர் 47 ரன்கள் எடுத்திருந்தபோது Sharukh Khan, சாம் கர்ரன் பந்தில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சென்னை தரப்பில் தீபக் சஹார் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 107 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. குறைவான இலக்கு என்பதால், சீரான இடைவெளியில் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் அடித்து, நிதானமான ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய மொயின் அலி 46 ரன்கள் எடுத்து வெளியேற, தொடக்க ஆட்டக்காரர் டு ப்ளிசிஸ் 36 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 15 புள்ளி 4 ஓவர்களின் முடிவில், 4 விக்கெட்டுகளை இழந்து, 107 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.