ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டம் - 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் த்ரில் வெற்றி
Apr 16 2021 9:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, தொடக்கம் முதலே தடுமாறிய நிலையில் விளையாடி வந்தது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில், அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட், 32 ரன்களில் 51 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக உனத்கட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியும் தொடக்கம் முதலே தடுமாறிய நிலையில் விளையாடி வந்தது. டெல்லியை போன்றே ராஜஸ்தான் அணிக்கும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் அரை சதத்தை பதிவு செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் வந்த கிறிஸ் மோரிஸ், தனது அதிரடி ஆட்டம் மூலம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் 19 புள்ளி 4 ஒவர்களில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிறிஸ் மோரிஸ் 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக அவிஷ் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனிடையே, மும்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் சென்னை அணி இரண்டாவது பேட்டிங்கை தேர்வு செய்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.