ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணி த்ரீல் வெற்றி: கடைசி பந்தில் 1 ரன்னை அடித்து மும்பையை வென்றது
Apr 10 2021 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 19 ரன்னிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 31 ரன்னிலும், இஷான் கிஷன் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய கிறிஸ் லின் 35 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில், 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, விராட் கோலி, மேக்ஸ்வெல், AB De வில்லியர்ஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், வெற்றியை நோக்கி பயணித்தது. விராட் கோலி 33 ரன்னிலும், மேக்ஸ்வெல் 39 ரன்னிலும் வெளியேற, கடைசி ஓவர் வரை களத்தில் நின்ற டி வில்லியர்ஸ், 3 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட இக்கட்டான சூழலில், ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இறுதியில் ஒரு பந்தில் ஒரு ரன் தேவை என்ற விறுப்பான கட்டத்தில், பெங்களூரு அணி வெற்றியை ஈட்டியது. இதன் மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இதனிடையே, இன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில், டெல்லி அணியை மகேந்திர சிங் தலைமையிலான சென்னை அணி எதிர்கொள்கிறது.