ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு : சொந்த நகரங்களில் எந்த அணிக்கும் போட்டியில்லை - ரசிகர்கள் சோகம்
Mar 8 2021 10:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், எந்த அணியும் அதன் சொந்த நகரங்களில் விளையாடாத வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
2021-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர், அடுத்த மாதம் 9ம் தேதி தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில், மும்பை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்ற தொடரை போல இல்லாமல், இந்த ஐ.பி.எல்., தொடரில் ஓர் வினோத முயற்சியை பிசிசிஐ மேற்கொண்டுள்ளது. அதன்படி, எந்த அணியும், அதன் சொந்த மண்ணில் விளையாடாது. உதாரணமாக, சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டி, சென்னையிலோ அல்லது மும்பையிலோ நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை, சென்னை, மும்பையை தவிர்த்து, வேறு மைதானத்தில்தான் போட்டி நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் சூழலில், இந்திய மண்ணில் போட்டியை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பி.சி.சி.ஐ., ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளது. சேப்பாக்கம் மைதானம் உட்பட மொத்தம் 6 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ப்ளே ஆப் சுற்றுகளும், மே 30ம் தேதி இறுதி போட்டியும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 10ம் தேதி சென்னை - டெல்லி அணிகள் மோதுகின்றன.