இந்திய வீரர்களின் சிறப்பான பேட்டிங்கால் டிராவில் முடிந்தது சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் - வெற்றிக்காக போராடிய ஆஸ்திரேலியா ஏமாற்றம்
Jan 12 2021 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹனுமன் விஹாரி, அஸ்வின் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி டிரா செய்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சிட்னியில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 244 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. 407 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் 5-ம் நாள் ஆட்டத்தில், கேப்டன் ரஹானே சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த புஜாராவும், ரிஷப் பன்ட்டும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக ரிஷப் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்டார்.
சதத்தை நோக்கி வேகமாக முன்னேறிய ரிஷப், 97 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அரைசதம் கடந்த புஜாரா 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் விஹாரியுடன் இணைந்த அஸ்வின் ஆட்டத்தை டிரா செய்யும் நோக்கில் விளையாடினர். விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்கள் தீவிர முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. எனினும் நங்கூரம் போல் நிலைத்து நின்ற அஸ்வின் மற்றும் விஹாரி ஆஸ்திரேலிய வீரர்கள் பந்துவீச்சை திறமையாக சமாளித்தனர். அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்களாக இருந்தபோது, போட்டியை முடித்துக் கொள்வதாக இரு அணிகளும் ஒப்புக் கொண்டன. இதனால் இந்தப் போட்டி, டிராவில் முடிந்தது. அஸ்வின் 39 ரன்களுடனும் விஹாரி 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதன் மூலம் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலை பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி பிரிஸ்பெனில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே, இடது கை கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார்.