இனப்பாகுபாட்டை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மீண்டும் திட்டவட்டம் - சர்ச்சைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி
Jan 10 2021 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிரிக்கெட் வீரர்கள் மீதான இனப்பாகுபாட்டை ஒருபோதும் ஏற்க முடியாது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
சிட்னி நகரில் 3வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தேனீர் இடைவேளைக்கு சற்று முன்பாக காலரியில் இருந்த சில ரசிகர்கள் ஃபீல்டில் ஈடுபட்டிருந்த இந்திய ரசிகர்களை நோக்கி சர்ச்சை கருத்துகளை பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே நேற்று, இனப்பாகுபாடு அடிப்படையில் இந்திய அணியின் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட சில வீரர்களை உள்ளூர் ரசிகர்கள் விமர்சித்த சர்ச்சை அடங்குவதற்குள் இன்று இரண்டாம் நாளாக மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு அரங்கேறியது. இதனால் மேற்கொண்டு விளையாடாமல் இந்திய வீரர்கள் ஆட்டத்தை நிறுத்தினர். இதன் காரணமாக இப்போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் காவல்துறையினர் வந்து சம்பந்தப்பட்ட ரசிகர்களிடம் விசாரணை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து போட்டி தொடர்ந்து நடைபெற்றது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதுபோன்ற பாகுபாட்டை ஏற்று கொள்ளவே முடியாது என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.