ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் ஆட்டம் - 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றது பஞ்சாப்
Oct 21 2020 10:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியது. இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பஞ்சாப் அணி பெற்றுள்ளது.
துபாயில் நடைபெற்ற 38-வது லீக் போட்டியில், டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பேட்டிங் தேர்வு செய்தார். டெல்லி அணிக்கு ஷிகர் தவான், பிரித்வி ஷா ஜோடி மோசமான தொடக்கம் கொடுத்தது. ஸ்ரேயாஸ், ரிஷப் பன்ட் ஆகியோர் தலா 14 ரன்களிலும், ஸ்டாய்னிஸ் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார். ஐ.பி.எல்., அரங்கில் தொடர்ந்து இரண்டாவது சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்தார். 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 164 ரன்களை டெல்லி அணி எடுத்தது. தவான் 106 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
165 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு கேப்டன் ராகுல் 15 ரன்களிலும், மயாங்க் அகர்வால் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். கெய்ல் 13 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய பூரன், 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய மேக்ஸ்வெல் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அணியின் ரன்வேகம் அதிகமாக இருந்ததால், பஞ்சாப் அணி எளிதாக வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சதமடித்த ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார்.