கொல்கத்தா அணி கேப்டன் பொறுப்பை துறந்தார் தினேஷ் கார்த்திக் - புதிய கேப்டனாக இயான் மோர்கன் நியமனம்
Oct 16 2020 3:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் விலகினார். புதிய கேப்டனாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் இயான் மோர்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக, கடந்த 2018-ம் ஆண்டு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டார். நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், 7 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி, 4 வெற்றி 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கொல்கத்தா அணி நிர்வாகத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதால் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும், கேப்டன் பொறுப்பை இயான் மோர்கனிடம் வழங்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். இதை ஏற்றுக் கொண்ட அணி நிர்வாகம், கேப்டனாக பணியாற்றிய தினேஷ் கார்த்திக்கு நன்றி தெரிவித்ததுடன், புதிய கேப்டனாக, இயான் மோர்கனை நியமித்துள்ளது.