பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் அதிரடி சதம் - 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி
Sep 25 2020 6:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில், 97 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை பஞ்சாப் அணி வென்றது. அதிரடியாக ஆடிய பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டியில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, பஞ்சாப் அணியை பேட்டிங் செய்யும்படி அழைத்தார். இதன்படி பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அபாரமாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில், 26 ரன்களில் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய கேப்டன் கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார். இதில், 7 சிக்சர்கள், 14 பவுண்டரிகள் அடங்கும். 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் பஞ்சாப் அணி எடுத்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 132 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்த தேவ்தத் படிக்கல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆரோன் பின்ச் 20 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 17 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பெங்களூரு அணி தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.