117 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்குகிறது சர்வதேச கிரிக்கெட் கொண்டாட்டம் - இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை
Jul 8 2020 10:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது. 117 நாட்களுக்கு பிறகு நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சவுதம்டனில் இன்று இந்திய நேரப்படி 3 முப்பது மணிக்கு தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் 13-ம் தேதி சிட்னியில் காலி மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.
117 நாட்கள் இடைவெளிக்கு பிறகு, இன்று மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. களத்தில் வீரர்களும், நடுவர்களும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வீரர்கள் தாங்கள் பயன்படுத்தும் கண்ணாடி, தொப்பி உள்ளிட்ட உடைமைகளை நடுவரிடம் வழங்கக்கூடாது. வீரர்கள் உடலோடு உரசி மகிழ்ச்சியை கொண்டாடுவதையும், குளிர்பானம், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனாக, ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.