பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மேலும் ஏழு வீரர்களுக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
Jun 24 2020 10:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில், மேலும் ஏழு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், ஷாதப் கான், ஹைதர் அலி, ஹரீஷ் ராஃப் ஆகிய மூன்று வீரர்களுக்கு, நேற்று முன்தினம் தொற்று உறுதி செய்யப்பட்டதாக, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
இந்நிலையில், அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இம்ரான் கான், காஷிப் பாட்டி, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், பகர் ஜாமன் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 10 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. பாதிக்கப்பட்ட வீரர்கள், அணியில் இடம்பெற்று போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.