தி காட் ஆஃப் கிரிக்கெட், மாஸ்டர் பிளாஸ்டர், தி லெஜன்ட் என்ற அனைவராலும் அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 1973-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி, ரமேஷ் டெண்டுல்கர் - ரஜ்னி டெண்டுல்கர் தம்பதிக்கு மகனாய்ப் பிறந்தார் சச்சின் டெண்டுல்கர். தனது அண்ணன் அஜித் டெண்டுல்கரின் ஆலோசனைப்படி, பயிற்சியாளர் Ramakant Achrekar-யிடம் முறையாகப் பயிற்சி பெற்றார் சச்சின் டெண்டுல்கர்.
1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி, 16-வது வயதில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடினார். 1990-களில் முன்னணி பந்து வீச்சாளர்களான மெக்ராத், ஷேன் வார்னே, சோயப் அக்தர், Waqar Younis, வாசிம் அக்ரம், நிடினி, பிரட் லீ, சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், லசித் மலிங்கா உள்ளிட்டோரின் பந்து வீச்சுகளை துல்லியமாக எதிர்கொண்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
பல்வேறு போட்டிகளில் தனி ஒருவனாக நின்று வெற்றி வாகை சூடியுள்ளார் சச்சின். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், முதன்முதலில், இரட்டைசதம் எடுத்த ஒரே வீரர் இவர்தான். அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், அதிக ரன்கள் எடுத்தவரும் சச்சின்தான். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர். இப்படி சாதனைகளுக்கு மேல் சாதனைப் படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். 50-க்கும் மேற்பட்ட முறை நடுவர்களின் தவறான முடிவுகளால் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்த போதும், ஒரு முறை கூட தனது கோபத்தையோ, ஆதங்கத்தையோ நடுவர்களிடம் சச்சின் டெண்டுல்கர் வெளிப்படுத்தியதில்லை என்பது அவருக்கே உரிய சிறப்பு அம்சமாகும்.
சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிக்க விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் இருந்தாலும், சாதனைகளை படைத்தவர் என்பது சச்சின்தான். எதற்காக கிரிக்கெட் விளையாட வந்தாரோ, அந்த கனவு 23 ஆண்டுகளுக்கு பிறகு சச்சின் டெண்டுல்கருக்கு நிறைவேறியது. கடந்த 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை அப்போதைய கேப்டன் எம்.எஸ்.தோனி சச்சினிடம் வழங்கிய தருணத்தை யாராலும் தற்போது வரை மறக்க முடியாது. கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெற்றார். அந்த தருணம், அவருடன் சேர்ந்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே கண்கலங்கியது.
பாரத ரத்னா உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்ற சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் இருக்கும் வரை அவரே தலைவனாகவும், முன்னோடியாகவும் இருப்பார் என்றால் மிகையாது.