ஒலிம்பிக் போட்டிகள் நடந்தாலும், பங்கேற்கமாட்டோம் என ஆஸ்திரேலியா, கனடா அறிவிப்பு - போட்டிகளை தள்ளி வைப்பது குறித்து ஜப்பான் அரசு தீவிர ஆலோசனை
Mar 24 2020 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடந்தாலும், தங்கள் பங்கேற்க மாட்டோம் என கனடா, ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளன. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் டோக்கியோவில் வரும் ஜூலை 24 - ஆகஸ்ட் 9-ம் தேதி ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், இந்தப்போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், திட்டமிட்டபடி ஒலிம்பிக் நடக்கும் என ஜப்பான் பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க மாட்டோம் என்று, கனடா, ஆஸ்திரேலியா நாடுகள் அறிவித்துள்ளன.
அதேநேரம், ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஷின்சோ அபே, 'ஒலிம்பிக் விளையாட்டை முழுமையாக நடத்த விரும்புவதாகவும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஒருவேளை சிக்கல் ஏற்பட்டால் நமக்கு வேறு வழியில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். வீரர், வீராங்கனைகளின் உடல்நலன் தான் முக்கியம் என்ற ஒலிம்பிக் தத்துவத்தின் படி, தள்ளி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.