இம்முறை ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா? - முடிவு குறித்து ஜப்பான் அரசு தீவிர ஆலோசனை
Mar 23 2020 11:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒலிம்பிக் போட்டிகளை திட்டமிட்டப்படி நடத்துவோம் என அறிவித்திருந்த ஜப்பான், தற்போது, போட்டிகளை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது என்று தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என கேள்வி எழுந்த சூழலில், வரும் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்டு 9-ம் தேதிவரை, திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியிருந்தார். ஒலிம்பிக் போட்டி ரத்தானால் ஜப்பானுக்கு சுமார் 97 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்ட நிலையில், போட்டியை நடத்த, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டு வந்தது. ஒலிம்பிக் தீபமும், ஏதென்ஸ் நகரிலிருந்து டோக்கியோ கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். அதேநேரம், ஒலிம்பிக் போட்டிகளை முழுவதும் ரத்து செய்வதென்பது சாத்தியமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.