கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி 2 ஒருநாள் ஆட்டம் - ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது
Mar 13 2020 6:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான கடைசி 2 ஒருநாள் ஆட்டங்களுக்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. தரம்சாலாவில் மழை காரணமாக முதலாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், விளையாட்டு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்க்கலாம் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்தது. விளையாட்டுப் போட்டிகளைத் தவிர்க்க முடியாது என்பதால், மைதானத்துக்கு வருகை தரும் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கான அனுமதியை ரத்து செய்யலாம் எனவும் விளையாட்டுத் துறை அமைச்சகம், விளையாட்டு நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டது.
இதன் காரணமாக, இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான கடைசி 2 ஒருநாள் ஆட்டங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சம்மந்தப்பட்ட கிரிக்கெட் சங்கங்கள் தரப்பில் இருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மகாராஷ்ட்ர சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ராஜேஷ் தோபே, கொரோனா வைரஸ் மற்றும் ஐ.பி.எல். போட்டிகள் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால், இதனைத் தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்று, ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் - அல்லது, ஐ.பி.எல். போட்டிகளை தள்ளிவைக்க வேண்டுமென தெரிவித்தார்.