19 வயது உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி - இந்திய அணியை வீழ்த்தி முதன்முறையாக மகுடம் சூடியது பங்களாதேஷ்
Feb 10 2020 10:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
19 வயது உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியை வீழ்த்திய பங்களாதேஷ் அணி, முதன்முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.
19 வயது உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த மாதம் 17-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில், லீக் மற்றும் நாக் - அவுட் சுற்று முடிவில், ஆசிய அணிகளான நடப்பு சாம்பியன் இந்தியாவும், பங்களாதேசும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இரண்டு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி, சென்வெஸ் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யும்படி அழைத்தது.
இதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக, ஜெய்ஸ்வால் மற்றும் சக்சேனா களமிறங்கினர். சக்சேனா விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பொறுப்புடன் விளையாடிய ஜெய்ஸ்வால், தனது 4-வது அரைசதத்தை பதிவு செய்தார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 88 ரன்களில், ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் விளையாடிய வீரர்கள், சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி, 47 புள்ளி 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. பங்களாதேஷ் அணியின் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன், பங்களாதேஷ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹொசைன் எமோன், 47 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விரைவில் ஆட்டமிழக்க, பொறுப்புடன் ஆடிய கேப்டன் அக்பர் அலி, கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிப் பெறச் செய்தார். 41 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு பங்களாதேஷ் அணி 163 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நின்ற பிறகு 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு 7 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம், முதன்முறையாக உலகக் கோப்பையை பங்களாதேஷ் அணி கைப்பற்றியது. ஆட்டநாயகனாக, பங்களாதேஷ் கேப்டன் அக்பர் அலியும், தொடர் நாயகனாக, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலும் தேர்வு செய்யப்பட்டனர்.