நியூசிலாந்துக்கு எதிரான 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
Jan 27 2020 9:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில், ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன்படி, கடந்த 24-ம் தேதி ஆக்லாந்தில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி, ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 20 ஓவர்கள் முடிவில், அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே எடுத்தது.
133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இவரைத் தொடர்ந்து, கேப்டன் விராட் கோலியும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராகுலுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார். பொறுப்புடன் ஆடிய ராகுல், அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில், 17 புள்ளி 3 ஓவர்களில், 3 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக, ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில், இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி, வரும் 29-ம் தேதி ஹாமில்டனில் நடைபெற உள்ளது.