ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் : 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
Jan 18 2020 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி, 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை சமன் செய்தது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. மும்பையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி, வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில், ரோகித் சர்மா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்னர், கேப்டன் விராட் கோலியுடன் கைகோர்த்த ஷிகர் தவான், 96 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி, ராகுல் ஆகியோரின் அதிரடி அரை சதத்தால், 50 ஓவர்கள் முடிவில், இந்திய அணி, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது.
341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு, டேவிட் வார்னர், துவக்கத்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதன் பின்னர், ஆரோன் பின்ச், ஸ்மித் ஆகியோர், நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். குல்தீப் யாதவின் பந்துவீச்சில், ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகியோர் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி, 49.1 ஓவர்களில், 304 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரை, இந்திய அணி, ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பெங்களூருவில் நாளை நடைபெற உள்ளது.