ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை ஐ.சி.சி. தலைவர் சீனிவாசனை, பி.சி.சி.ஐ. தலைவராக செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
Sep 2 2014 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் நீதிபதி முகுல் முத்கால் குழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர் என். சீனிவாசனை, பி.சி.சி.ஐ. தலைவராக செயல்பட அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கில், முத்கால் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க 2 மாதகால அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் பலகோடி ரூபாய் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை அணியின் உரிமையாளரான திரு. என். சீனிவாசனின் உறவினர் குருநாத் மெய்யப்பன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் சீனிவாசன் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மீது சூதாட்ட புகார் எழுந்ததைத் தொடர்ந்து, இதனை விசாரிக்க நீதிபதி முகுல் முத்கால் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, முத்கால் விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கையில், தன்னை பற்றி விவரம் உள்ளதா? என்றும், ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் நீதிபதி முகுல் முத்கால் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் வரை பி.சி.சி.ஐ. தலைவராக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் சீனிவாசன் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் நீதிபதி முகுல் முத்கால் குழு, இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் வரை என். சீனிவாசனை, பி.சி.சி.ஐ. தலைவராக செயல்பட அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. நீதிபதி திரு. டி.எஸ்.தாகுர் தலைமையிலான அமர்வு, முகுல் முத்கால் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 மாதங்கள் காலஅவகாசம் நீட்டித்து உத்தரவிட்டது. விசாரணை முடிவடையும் வரை இடைக்கால அறிக்கை விவரத்தைக் கூறமுடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.