விழுப்புரத்தில் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் : 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு
Nov 19 2017 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி நேற்று நள்ளிரவு ஊஞ்சல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர் பட்டுச் சேலை உடுத்தி, நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, தாலாட்டு மண்டபத்தில் உள்ள தங்க ஊஞ்சலில் அம்மன் அமர வைக்கப்பட்டு தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
இதனிடையே, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் நம்பெருமாளுக்கான ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்த நிலையில், தாயார் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வருகிறது. ரெங்கநாச்சியார் தாயார் தங்கப்பல்லக்கில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, ஊஞ்சல் மண்டபத்திற்கு வந்தடைந்தார். தாயாரை பெருந்திரளான பக்தர்கள் வழிபட்டனர்.