புகழ்பெற்ற நெல்லையப்பர் ஆலயத்தில் நடராஜர் திருத்தாண்டவ அருட்காட்சி வெகுவிமரிசையாக அரங்கேறியது.
திருநெல்வேலி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி திருக்கோயிலில், கடந்த 1-ம் தேதி அன்று மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தாமிர சபையென போற்றப்படும் இத்திருத்தலத்தில், தினமும் அதிகாலை திருவெம்பாவை வழிபாட்டுடன், சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனைகள் நடைபெற்றன. பத்தாம் நாளான இன்று, ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜரின் திருத்தாண்டவ காட்சி சிறப்பாக அரங்கேறியது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா அபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ரத்தின சபையாக போற்றப்படும் இத்திருத்தலத்தில், உற்சவர் நடராஜ பெருமானுக்கு வாழை, மா, ஆரஞ்ச், ஆப்பிள், கொய்யா, திராட்சை உள்ளிட்ட 34 வகையான பழங்களால், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இன்று அதிகாலை, நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்துடன், கோவில் வளாகத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பூரை அடுத்த அவினாசி ஸ்ரீ அவிநாசி லிங்கேஷ்வரர் ஆலயத்தில், நடராஜ பெருமான் மற்றும் சிவகாமி அம்மனுக்கு, பால், விபூதி, வெண்ணெய், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 48 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அந்திமந்தாரை, சம்பங்கி, தாமரை, வேர், ஏலக்காய், வெட்டிவேர், மருகு, செவ்வந்தி போன்ற மலர்களால், சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர்
ஆலயத்தில் சிறப்பு அபிஷேகத்திற்கு பின்னர், நடராஜ பெருமான் மற்றும் சிவகாமி சுந்தரி அம்மனும் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருஞானசம்பந்தர் சன்னதியில் நடைபெற்ற திருக்கண் சாற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து, சுவாமி திருவீதியுலா நடைபெற்றது.
ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஒரு லட்சம் ருத்ராட்சங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள, சிவகாமி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. நடராஜர் சன்னதியின் முன்பாக, மாணிக்கவாசக பெருமான் எழுந்தருள, சிறப்பு தீபாராதனை நடந்தது.
தூத்துக்குடி சிவன் ஆலயத்தில், திருவாதிரை ஆருத்ரா விழாவையொட்டி சுவாமி, நடராஜர் திருக்கோலத்தில் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.